தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், தனது தொடக்கத்திலிருந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். அதோடு, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘பராசக்தி’ என்ற படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரவி மோகனின் கைவசம் தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’, மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் ‘ஜீனி’ படம் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக, ‘டிக்கிலோனா’ மற்றும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘ஜெயம் ஸ்டுடியோஸ்’ எனப் பெயரிட்டுள்ளார். இதற்கான லோகோவை அவர் வெளியிட்டுள்ளதோடு, தனது தயாரிப்பில் உருவாகும் படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.