தென்னிந்திய சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா. அவர் கடைசியாக “இசை” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பின் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், தற்போது “கில்லர்” என்ற படத்தை இயக்குவதோடு, அதில் நடிக்கவும் உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. காதல், காமெடி மற்றும் ஆக்ஷன் ஆகியவை கலந்த ஒரு திரைக்கதையை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு மெக்ஸிகோவிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து பேசிய எஸ்.ஜே. சூர்யா, “இந்த படம் எனது கனவுப்படம். பல வருடங்களாகவே இதற்கான திரைக்கதை எழுதி வந்தேன். இது மக்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும். லாக்டவுன் காலத்திலேயே இந்தக் கதையை எழுதிவிட்டேன். இப்போது இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எம்ஜிஆர் போன்ற மக்கள் படங்களை வழங்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இப்படம் ஐந்து மொழிகளில் உருவாகிறது. முக்கியக் காட்சிகள் இந்தியாவிலும், மெக்ஸிகோவிலும் படமாக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.