கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. அவர் இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘காந்தாரா சாப்டர்-1’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ரிஷப் ஷெட்டி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் மாணி அணை நீர்த்தேக்கப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழுவினர் படகு மூலமாக அங்கு சென்றபோது, படகு கவிழ்ந்ததாகவும், ரிஷப் ஷெட்டிக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நீச்சல் தெரிந்ததால் அவர்கள் நீந்தி கரையை அடைந்ததாகவும் தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆதர்ஷ் இந்த நிகழ்வு குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், படக்குழுவினர் பயன்படுத்திய எந்த படகும் கவிழவில்லை. தற்போது மாஸ்திகட்டேயில் உள்ள மாணி அணை பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு ஒரு பெரிய படகு பின்னணி காட்சிக்காக பயன்படுத்தப்பட்டது. பருவமழையின் காரணமாக அதன் மேல்பகுதி கீழே விழுந்தது. ஆனால் அந்த நேரத்தில் எந்த நடிகரும் அல்லது படக்குழுவினரும் அந்த படகில் இருக்கவில்லை.
வனத்துறை, உள்ளூர் காவல்துறை மற்றும் பஞ்சாயத்திடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளும் பெற்றுள்ளோம். விபத்து சம்பவங்களை ‘காந்தாரா’ படத்துடன் தொடர்புபடுத்துவதை நிறுத்துங்கள். ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவம் அளிக்க நாங்கள் மிகவும் சிரமத்துடன் உழைத்து வருகிறோம். படக்குழுவினர் முழு கவனத்துடன் வேலை செய்ய அனைவரும் அனுமதி வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.