அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்த திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’ கடந்த மாதம் மே 1ம் தேதி வெளியாகி, பெரும் வரவேற்பும் சிறந்த வசூலையும் பெற்றது. இந்தப் படத்தை நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட திரையுலகின் பிரபலங்கள் பார்வையிட்டு, படக்குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் அவர், “சமீப காலங்களில் ‘டூரிஸ்ட் பேமிலி’ என்பது மிகவும் சிறப்பான எழுத்து மற்றும் உருவாக்கம் கொண்ட படம். கதையை சொல்லும் விதத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல். படம் எனை இருக்கையில் சஞ்சலமின்றி வைத்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உரிய தருணங்கள், இடங்கள் நன்றாக அமைந்துள்ளன. மேலும், அந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தும் நடிகர்களால் சிறப்பாகவும் குறைவேதுமின்றி கையாளப்பட்டுள்ளன. நடிப்புகள் எல்லாம் அற்புதமாக இருந்தன. இசையும் இந்தப் படத்தின் மற்றொரு முக்கியமான பலமாக இருந்தது. என் நண்பர் அபிஷன் ஜீவிந்திற்கும், முழு படக்குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
அவரின் பாராட்டுக்கு பதிலளித்து, இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், “மிக்க நன்றி சார். உங்கள் பாராட்டுகளைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் ஒரு இனிய மனிதர். உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.