சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசும் போது நடிகர் ஆர்யா, “‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இதன் கதையும் எனக்கு மிகவும் நன்றாக இருந்ததால் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். சந்தானம் படத்தில் தன்னுடைய முழுத் திறமையையும் காட்டியிருக்கிறார். இப்படம் வெற்றிபெற்றால், அடுத்த படத்தையும் தயாரிக்கத் தயார்” என கூறினார்.

அவரைத் தொடர்ந்து சந்தானம் பேசுகையில், ஏய் மச்சான், காமெடியனாக நடிக்கும்போது நீ நீயாக இருக்கிறாயே. ஹீரோவாக ஆன பிறகு மாறிட்டே’ என்று ஆர்யா என்னிடம் கேட்டார். இந்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் பழைய சந்தானத்தை மீண்டும் வெளிக்கொண்டு வர வைக்கும். இயக்குநர் பிரேம் தமிழ்நாட்டின் கிறிஸ்டோபர் நோலன் போல” என கிண்டலாகக் கூறினார்.
பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சந்தானம், ‘கோவிந்தா கோவிந்தா’ பாடலைக் கொண்டு நான் கிண்டல் செய்யவில்லை. நான் பெருமாளின் பக்தன். எனக்கு படத்தின் முதலில் கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். பெருமாள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் திருப்பதி கீழ் பகுதியிலிருந்து மேல் பகுதியை நோக்கி நடந்து செல்கிறேன்.
இப்போது ஏற்கனவே நிறைய ஹீரோ படங்கள் தயாராகின்றன. நிறைய பேர் என்னை காமெடியன் வேடங்களில் பார்த்துவிட்டார்கள். இனிமேல் அந்த வகையில் நடிக்க வேண்டுமானால் புதிய பாணியில் முயற்சி செய்ய வேண்டும் என எண்ணுகிறேன். நண்பர் சிம்புவுக்காக மீண்டும் அவருடைய படத்தில் காமெடியனாக நடிக்கிறேன். அதேபோல் நண்பர் உதயநிதி அழைத்தால், சில விஷயங்கள் சரியாக அமையும்பட்சத்தில் அவருக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்ய தயார்” என தெரிவித்தார்.