2018ஆம் ஆண்டு வெளியான ’96’ திரைப்படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கினார். பள்ளி கால காதலை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படம் வெளிவந்ததும் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றும் ரசிகர்களின் மனதில் ராம் மற்றும் ஜானு என்ற பெயர்கள் ஆழமாக பதிந்துள்ளன.

இயக்குநர் பிரேம் குமார், கார்த்தியை முன்னணி கதாபாத்திரமாக வைத்து இயக்கிய ‘மெய்யழகன்’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரேம் குமார் சமீபத்திய பேட்டியில் ’96’ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான கதை வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது அந்த வேலைகள் முடிவடைப்புத் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் ’96’ இரண்டாம் பாகத்தை பிரேம் குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ’96’ இரண்டாம் பாகத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.