1992 ஆம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த படம் அண்ணாமலை. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுவயதில் இருந்து நண்பர்களாக இருக்கும் ஏழை பால் வியாபாரி அண்ணாமலை மற்றும் பணக்கார ஹோட்டல் வியாபாரி அசோக் ஆகியோருக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயலும் அசோக்கின் தந்தையின் எதிர்ப்பு நட்பைச் சுற்றி படக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.


இசை மற்றும் ஒலிப்பதிவு தேவாவால் இசையமைக்கப்பட்டது மற்றும் பாடல்களுக்கான வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பி.எஸ். பிரகாஷ், படத்தொகுப்பை கணேஷ் குமார் இருவரும் செய்திருந்தனர். 1992 காலகட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றது அண்ணாமலை படம்.

இந்த படம் வெளியான சமயத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி அண்ணாமலை படத்துக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்திருந்தது. படத்தின் போஸ்டர்கள் அதிகம் ஒட்ட கூடாது என பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது. இதனால் படத்திற்கு போதிய அளவு விளம்பரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் 175 நாட்கள் ஓடி வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரஜினியின் அண்ணாமலை படம் பற்றி பேசப்பட்டு வருகிறது. அதில் இடம் பெற்றுள்ள “மலைடா அண்ணாமலை” “அசோக் உன் காலெண்டரி குறிச்சு வைச்சுக்கோ” போன்ற வசனங்களும் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.