தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சரண், தனது நடனத் திறமையாலும் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்தவர். திருமணத்திற்குப் பிறகு சில காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழில் ‘சண்டக்காரி’, ‘நான் வயலென்ஸ்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், “எப்படி இன்னும் அழகு குறையாமல் இருக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்ரேயா, தனது மனதில் எதையும் மறைத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை என்று கூறினார். மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசிவிடுவதும், எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் தெளிவான மனநிலையுடன் இருப்பதுமே தனது அழகுக்கும் புத்துணர்ச்சிக்கும் காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார்.
மேலும், இயற்கையும் இறைவனும் தனக்கு வழங்கிய அழகை முடிந்தவரை பாதுகாத்து வருவதாக கூறிய ஸ்ரேயா, “அவ்வளவு தான்” என புன்னகையுடன் தனது பதிலை முடித்தார்.
