‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகை பிரீத்தி முகுந்தன், தற்போது தென்னிந்திய சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார். அறிமுகப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘நாக்ஜில்லா’, ‘கண்ணப்பா’, ‘சர்வம் மாயா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருந்த பிரீத்தி, குறிப்பாக அதிரடி சண்டைக் காட்சிகளில் வெளிப்படுத்திய திறமையால் பாராட்டுகளைப் பெற்றார். இந்த வெற்றிக்குப் பிறகு அவருக்கு மேலும் பல ஆக்ஷன் பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த தனது ஆரம்பகால அனுபவங்களை அவர் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரீத்தி முகுந்தன், “மாடலிங் செய்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு முக்கியமான வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு 18 வயது தான். ஆனால் என்னால் ஆடிஷன் செய்ய முடியாது, நடிக்கத் தெரியாது, நான் என்னையே அவமானப்படுத்திக் கொள்வேன் என்ற பயம் இருந்தது. என்மீது எனக்கே நம்பிக்கை இல்லாமல் மிகவும் தயக்கத்தில் இருந்தேன்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “அந்த நேரத்தில் என் பெற்றோர் கல்லூரி விடுதிக்கே வந்து என்னை நேரில் சந்தித்தார்கள். ‘ஏன் முயற்சி செய்யக்கூடாது? இது ஒரு தொடக்கம் தான், முயற்சி செய்து பாரு’ என்று என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களது அந்த வார்த்தைகள்தான் எனக்கு முதல் தைரியத்தை கொடுத்தது. முதல் ஆடிஷனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த அனுபவம்தான் சினிமாவைப் பற்றிய உண்மையான ஆர்வத்தையும் காதலையும் என்னுள் உருவாக்கியது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
