சிறுவர்களுக்கு தடகள பயிற்சி அளிக்கும் பாரி இளவழகன், கல்லூரி காலம் முதலே ஆங்கிலோ இந்திய பெண்ணான ரம்யா ரங்கநாதனை காதலித்து வருகிறார். ரம்யாவுக்கும் அவர் மீது காதல் மலர்ந்தாலும், சாதி பற்றிய எண்ணத்தில் வாழும் தனது தாய் ரோஜாவிடம் இதை சொல்ல முடியாமல் தவிக்கிறார். இதற்கிடையில், பாரிக்கு வேறு பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
பின்னர் தந்தை சேத்தனின் உதவியுடன் ரோஜாவை சமாதானப்படுத்தி, ரம்யாவின் வீட்டிற்கு குடும்பத்துடன் செல்கிறார் பாரி. ஆனால் ரம்யாவின் தந்தையை பார்த்ததும் சேத்தன் இந்த திருமணம் நடக்காது என மறுக்கிறார். இருவருக்கும் இடையே என்ன நடந்தது? பாரி – ரம்யா காதல் வெற்றி பெற்றதா? என்பதற்கு கலகலப்பாக பதில் அளிக்கிறது ‘அன்பே டயானா’.
‘ஜமா’ படத்திற்கு பிறகு பாரி இளவழகன், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதையில் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா ரங்கநாதன் ஆங்கிலோ இந்திய பெண்ணாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள ரோஜா தனது டார்க் காமெடியால் கவனம் ஈர்க்கிறார். சேத்தன், ‘பரிதாபங்கள்’ கோபி, செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.
ஷெல்லி காலிஸ்டின் ஒளிப்பதிவும், பரத் சங்கரின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. கலகலப்பான காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தினாலும், மெதுவாக செல்லும் திரைக்கதை மற்றும் சில லாஜிக் குறைபாடுகள் பலவீனமாக தெரிகின்றன. இருப்பினும், நகைச்சுவையை மையமாக வைத்து ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சியில் இயக்குநர் பாரி இளவழகன் கவனம் ஈர்த்துள்ளார்.
