சமையல் செய்வதும், வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் பெண்களின் கடமை என்ற பார்வையை மாற்ற வேண்டும் என்றும், பாலின வேறுபாடு இல்லாமல் ஒவ்வொரு வயது வந்தவரும் செய்ய வேண்டிய அடிப்படை பொறுப்பாகவே அவற்றை பார்க்க வேண்டும் என்றும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “வீட்டுப் பொறுப்புகளை பெண்களே மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் சமூகத்தில் நிலவுகிறது. அதே நேரத்தில், ஆண்கள் பெரும்பாலும் அந்தப் பொறுப்புகளில் இருந்து விலக்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகளை பாலின அடிப்படையில் பிரிக்கக் கூடாது. சமைப்பதும், சுத்தம் செய்வதும் பெண்களுக்கான வேலை அல்ல; அவை ஒவ்வொரு வயது வந்தவரும் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை வாழ்க்கைத் திறன்கள். சோம்பேறித்தனத்தை பாலினத்துடன் இணைத்து பார்க்க வேண்டாம்.
பொழுதுபோக்குத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பை விட திரைப்படங்களை உருவாக்குவது தற்போது மிகவும் எளிதாகியுள்ளது. திரைப்படத் துறையில் பணியாற்ற விரும்புபவர்கள், தாங்கள் எந்தத் துறையில் செயல்பட விரும்புகிறார்கள் என்பதை முதலில் தெளிவாகத் தீர்மானிக்க வேண்டும். இந்தத் துறைக்குள் நுழைவது எளிதான விஷயம் அல்ல. ஆனால், டிஜிட்டல் தளங்கள் திரைப்பட உருவாக்கத்தின் நடைமுறையையே மாற்றியுள்ளன. படைப்பாளிகள் பாரம்பரிய அமைப்புகளை மட்டும் நம்பாமல், தங்களது படைப்புகளை நேரடியாக பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை தற்போது பெற்றுள்ளனர். உங்களிடம் ஒரு நல்ல யோசனை இருந்தால், அதை ஒரு வீடியோவாக உருவாக்கி யூடியூப் போன்ற தளங்களில் வெளியிடலாம்” என்று தெரிவித்தார்.
மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற பிறகு திரைப்படங்களில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டைத் தாண்டி ஹாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்து உலகளவில் பிரபலமான நடிகையாக உயர்ந்துள்ளார். இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள அவர், 2002-ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் புதிய திரைப்படம் ஒன்றில் இணைந்து பணியாற்ற இருப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். தற்போது இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்துவருகிறார்.
