அருள்நிதி நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சுமார் பத்து ஆண்டுகள் கழித்து வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ உருவாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ஜீ5 நிறுவனம் ரூ.50 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ் சினிமாவில் அதிக ஓடிடி தொகைக்கு விற்பனையான முதல் ஹாரர் திரைப்படம் என்ற சாதனையையும் இது படைக்கலாம் என கூறப்படுகிறது. முதல் இரண்டு பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக மூன்றாம் பாகத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படம் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
