என் ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள்தான்… நடிகை சுவாசிகா நெகிழ்ச்சி!

‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சுவாசிகா, தொடர்ந்து ‘மாமன்’, ‘கருப்பு’ உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் ஆதரவு குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ் மக்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நன்றி சொல்லுவதைத் தவிர வேறு எதையும் கூற முடியவில்லை. என் மீது நீங்கள் காட்டும் அன்பையும் ஆதரவையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படம் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாகி, இத்தனை பெரிய வரவேற்பைப் பெறும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நிஜமாகியிருக்கிறது” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். தற்போது என் ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள்தான். இனி வரும் காலங்களில் மேலும் பொறுப்புடன் கதைகளை தேர்வு செய்து, உங்களை ஏமாற்றாத வகையில் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க கடினமாக உழைப்பேன்” என்று கூறியுள்ளார். சுவாசிகாவின் இந்த உருக்கமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading