‘ரா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் அஷ்ரப், தற்போது ‘போட்டோகிராபர்’ என்ற புதிய திரைப்படத்தில் நாயகனாக நடித்திருப்பதுடன், அந்த திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளார். ‘சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர்’ பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கதையின் மையமாக மர்மம், உயிர் பிழைப்பு மற்றும் உளவியல் பரபரப்பு ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த திரைப்படத்தில் அஷ்ரப்புக்கு ஜோடியாக நடிகை ஜனனி நடித்துள்ளார். மேலும், கருணாகரன், ஆடுகளம் நரேன், ‘உறியடி’ சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு ரயீஸ் அகமது ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ராஜ்குமார் சந்திரசேகன் இசையமைத்துள்ளார். ஏபிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். அப்துல் பாசித் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
திரைப்படத்தின் கதை குறித்து பேசிய அஷ்ரப், “இந்த திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு வனவிலங்கு புகைப்படக் கலைஞர். ‘மதிகெட்டான் சோலை’ என்ற மலைக் கிராமத்திற்கு தனது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு அரிய இயற்கை நிகழ்வை புகைப்படம் எடுக்கும் நோக்கில் அவர் செல்கிறார். ஆனால் அந்த தேடல், ஒரு கட்டத்தில் அவரது உயிர் பிழைப்பிற்கான போராட்டமாக மாறுகிறது. அதன்பிறகு நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் பரபரப்பும் திகிலும் கலந்த திரில்லர் பாணியில் சொல்லப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். இந்த வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
