நீண்ட இடைவெளிக்கு பிறகு கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஆஸ்னா ஜவேரி!

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆஸ்னா ஜவேரி. தனது முதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அதனைத் தொடர்ந்து ‘இனிமே இப்படித்தான்’, ‘மீன் குழம்பும் மண்பானையும்’, ‘பிரம்மா டாட் காம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தனது இயல்பான நடிப்பு மற்றும் திரை தோற்றத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ திரைப்படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் ‘கன்னித்தீவு’ திரைப்படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும், கதாநாயகியாக பெரிய அளவில் திரையுலகில் தொடர்ந்து செயல்படவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவரை ரசிகர்கள் அதிகமாக காண முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஆஸ்னா ஜவேரி மீண்டும் கதாநாயகியாக ‘வள்ளுவன்’ திரைப்படத்தின் மூலம் திரும்பி வந்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சங்கர் சாரதி இயக்கியுள்ளார். நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அஷ்வத் இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளதுடன், ஆறுபடை புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்னா ஜவேரி கதாநாயகியாக மீண்டும் வருவதால், இந்த திரைப்படம் மீது ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading