நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராம் மற்றும் ஊர்வசி தம்பதியினர், தங்களது இரண்டு மகள்களுடன் அமைதியான மற்றும் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். எப்போதும் சிறு சிறு விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் இரண்டு மகள்கள், அவர்களது குறும்புகள், அன்றாட கலாட்டாக்கள் மற்றும் குடும்பத்தினரிடையேயான நகைச்சுவையான தருணங்கள் என வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்கிறது. ஆனால் அந்த குடும்பத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், மூத்த மகளுக்கு ரவுடி சாண்டி தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கத் தொடங்குகிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றிய இந்த தொல்லை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், சாண்டியின் குடும்பத்தினரும் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கத் தொடங்குவதால், அந்த குடும்பம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறது. இந்த பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது என்று குடும்பமே குழப்பத்தில் இருக்கும் நிலையில், திடீரென சாண்டி கொலை செய்யப்படுகிறார்.
இந்த கொலை சம்பவத்தை விசாரிக்க காவல்துறை அதிகாரியாக மிஷ்கின் களமிறங்குகிறார். விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே ஜெயராம் குடும்பத்தின் மீது சந்தேகத்தின் பார்வை திரும்புகிறது. விசாரணை தீவிரமடையத் தொடங்கியதும், குடும்ப உறுப்பினர்களே ஒருவரை ஒருவர் சந்தேகிக்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் சந்தேகத்தின் திசை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு நபர்களை நோக்கி நகர்கிறது. இறுதியில் சாண்டியை கொலை செய்தது யார்? உண்மையான குற்றவாளியை மிஷ்கின் கண்டுபிடித்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதையாக அமைந்துள்ளது.
படத்தின் மிகப்பெரிய பலமாக ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் திகழ்கின்றனர். கணவன்-மனைவி கதாபாத்திரங்களில் இருவரும் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு, ஒருவருக்கொருவர் கொடுக்கும் கவுண்டர்கள், நகைச்சுவை கலந்த உரையாடல்கள் மற்றும் சிறப்பான டைமிங் சென்ஸ் ஆகியவை பல இடங்களில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணியை மீண்டும் திரையில் காண்பதே ரசிகர்களுக்கு ஒரு தனி மகிழ்ச்சியாக அமைகிறது.
காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள மிஷ்கின், வழக்கமான போலீஸ் கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றும் அவரது கதாபாத்திரம், கதையின் இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத விதமாக கவனத்தை ஈர்க்கிறது. தனது தனித்துவமான நடிப்பு பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் அவர் நடித்துள்ளார்.
ரவுடி சாண்டிக்கும் இந்த திரைப்படம் முக்கியமான மைல்கல்லாக அமைகிறது. நடன இயக்குநர் என்ற தனது அடையாளத்தை தாண்டி, வில்லத்தனமும் நகைச்சுவையும் கலந்த கதாபாத்திரத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சஞ்சனா மற்றும் அனந்திகா ஆகியோர் இன்றைய நடுத்தர குடும்ப இளம் பெண்களின் மனநிலையையும், வாழ்க்கை முறையையும் இயல்பாக பிரதிபலிக்கின்றனர். அவர்களது குறும்புகள், சண்டைகள் மற்றும் பேச்சு நடை அனைத்தும் மிகவும் யதார்த்தமாக அமைந்துள்ளன. யோகி பாபு, ஜி.கே.எம். தமிழ்குமரன், பூர்ணிமா ரவி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
இயக்குநர் பாண்டிராஜ், பெண்களுக்கு எதிராக நடைபெறும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து, அதை சோகமான அணுகுமுறையில் அல்லாமல் நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு கலந்த வடிவில் சொல்ல முயற்சித்துள்ளார். அந்த முயற்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ள அவர், கிளைமாக்ஸ் பகுதியில் சமூக அக்கறை கொண்ட ஒரு கருத்தையும், இளைஞர்களுக்கான முக்கியமான ஒரு அறிவுரையையும் பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார். ஃபாக்ஸன் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளன. பின்னணி இசையும் கதையின் உணர்வுகளை வலுப்படுத்தி, திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
