டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘மோனிஷா என் மோனலிசா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். அதனைத் தொடர்ந்து ‘மலபார் போலீஸ்’, ‘குஷி’, ‘பட்ஜெட் பத்மநாதன்’, ‘லூட்டி’, ‘ஸ்டார்’, ‘வேதம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல்களிலும் கவர்ச்சி நடனங்களிலும் தோன்றி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்போது சினிமாவிலிருந்து விலகி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை மும்தாஜ், திரையுலகில் நடிகைகள் எதிர்கொள்ளும் மறைமுக அழுத்தங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த பேட்டியில் அவர் கூறுகையில், நடிகையாக இருந்த காலத்தில் தன்னுடைய வாழ்க்கையும், திரைப்பட வாய்ப்புகளும் முழுமையாக இயக்குநர்களின் முடிவுகளின் அடிப்படையிலேயே அமைந்திருந்ததாக தெரிவித்தார். படப்பிடிப்பிற்கு முன்பு காட்டப்படும் உடைகளும், நேரடியாக படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்படும் உடைகளும் பல நேரங்களில் வேறுபட்டதாக இருக்கும் என்றும், பலமுறை மிகவும் குறைவான ஆடைகளை அணிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டதாகவும் கூறினார்.
“இது ஏன் இவ்வளவு சிறிய உடை?” என்று கேட்டால், “இயக்குநர் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். பாடலுக்கு இது தான் பொருத்தமாக இருக்கும்” என்று பதில் அளிப்பார்கள் என மும்தாஜ் தெரிவித்துள்ளார். ஒரு நடிகையாக இயக்குநரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலையே உண்மையான ஒடுக்குமுறை என அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். மேலும் தற்போது தாம் ‘அபாயா’ அணிந்து வெளியே செல்லும் வாழ்க்கையைத் தேர்வு செய்திருப்பதாகவும், முன்பு கவர்ச்சி உடைகளில் இருந்தபோது ஆண்கள் தன்னை பார்த்த விதத்திற்கும், தற்போது அபாயா அணிந்திருக்கும் போது கிடைக்கும் பார்வைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதை உணர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
