நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வீட்டு விலங்குகள் மீது எப்போதுமே அதிகமான பாசம் இருப்பது அறிந்த விஷயமாகும். அவரது மும்பை இல்லத்தில் ஏற்கனவே ஒரு பூனை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஆறு மாத வயதுடைய புதிய பூனைக்குட்டி ஒன்றை அவர் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கியுள்ளார்.
இந்த பூனைக்குட்டியை முன்னதாக ஒரு பெண்மணி வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண்மணி அதை ஸ்ருதிஹாசனின் தோழி ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து பூனை வளர்ப்பதால் தனக்கு அலர்ஜி ஏற்படுவதால், இனிமேல் அந்த பூனைக்குட்டியை பராமரிக்க முடியாது என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த நடிகை ஸ்ருதிஹாசன், உடனடியாக அந்த பூனைக்குட்டியை தத்தெடுத்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து வளர்க்க ஆரம்பித்துள்ளார். மேலும் அந்த பூனைக்குட்டிக்கு ‘அஸ்லன் ஹாசன்’ என்று பெயரும் சூட்டியுள்ளார். ஸ்ருதிஹாசனின் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களது பெயருக்கு பின்னால் ‘ஹாசன்’ என்ற பெயரை இணைப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், தனது செல்லப்பிராணிக்கும் அதே பெயரை இணைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
