மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடாக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் தனது தடத்தை பதித்தார். அடுத்ததாக, ராம் சரண் நடிப்பில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் நடிகை ஜான்வி கபூர் தனது மது பழக்கத்தைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நான் மதுவுக்கு அடிமையாக இருந்தேன் அல்லது அதை தவறாக பயன்படுத்தினேன் என்று சொல்ல முடியாது. எனக்கு சில சமயங்களில் குடிக்கும் பழக்கம் இருந்தது. என் வாழ்க்கையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்திய ஒரு அனுபவத்திற்குப் பிறகு இது தொடங்கியது. சில நேரங்களில் ஏதாவது குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். காலையில் விழித்தெழும் போது ஏற்படும் தலைவலி எனக்கு ஒரு விதமான சங்கடத்தை ஏற்படுத்தும். மேலும், என்னிடமிருந்து ஒரு குறிப்பிட்ட வாசனையை நான் உணர்ந்தேன். அது என் வாழ்க்கையில் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து நான் முன்பு உணர்ந்த அதே வாசனை. அந்த வாசனை அந்த நாள் நல்ல நாளாக இருக்காது என்ற உணர்வை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
