நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் காதல் குறித்து தனது எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “காதல் என்றால் என்ன, உறவு என்றால் என்ன என்பதில் பலரும் குழப்பமடைந்து இருப்பதாக நான் நினைக்கிறேன். சில சமயங்களில் காதல் ஒரு பரிவர்த்தனையாக மாறும் அபாயமும் உள்ளது. ஒருவர் மற்றவரிடம் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு, அவர்கள் நாம் விரும்பும் விதத்தில் நடக்க வேண்டும் என்று நினைக்கும் தருணத்தில், அந்த காதல் உண்மையான உணர்வாக இல்லாமல் ஒரு வியாபாரமாக, பரிவர்த்தனையாக மாறிவிடுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “இருவர் தனித்தனியாக ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். ஆனால் அந்த உறவுதான் காதலை முழுமையாக வரையறுக்கிறது என்று சொல்ல முடியாது. ஒருவரை உண்மையாக நேசிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். நம்முடைய எண்ணங்களையும் விருப்பங்களையும் அவர்கள்மீது திணிப்பதன் மூலம் காதல் உருவாகாது. அது கட்டாயப்படுத்தப்பட்ட உறவாக மாறிவிடும்” என்று அவர் விளக்கமளித்தார்.
அதேபோல், “சினிமாவில் பொதுவாக சொல்லப்படும் போல, ஒரே ஒரு உண்மையான காதல் மட்டுமே இருக்கும் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. காதல் என்பது ஒரே ஒரு அனுபவத்திற்குள் அடங்கிய ஒன்று அல்ல. அது ஒருமுறை மட்டும் நிகழும் விஷயமும் அல்ல. நாம் மனதில் நினைக்கும் வரையிலும், வாழ்வில் பல தருணங்களில் காதல் உருவாக முடியும். அந்த உணர்வு வெளிப்புற சூழ்நிலைகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை; அது நம்முள் உருவாகும் ஒரு ஆழமான உணர்வு” என்றும் தமன்னா கூறியுள்ளார்.
மேலும், தமன்னா மற்றும் விஜய் வர்மா இடையே காதல் இருந்தது அறியப்பட்ட ஒன்று. ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
—
