சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்கு பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் முன்வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பல்வேறு பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளிலிருந்தும் சென்னை திரும்பி வந்து வாக்களித்தனர்.
அந்த வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்க முயன்றும், அவரால் தனது வாக்கை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கான காரணத்தை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி விளக்கியுள்ளார்.
அவர் கூறுகையில், “நான் சென்னையில் வாக்களித்துவிட்டு மும்பைக்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அதே நேரத்தில் கோயம்புத்தூரில் வாக்களிக்கச் செல்ல லோகேஷ் வந்திருந்தார். இருவரும் சந்தித்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டோம். நான் உள்ளே சென்றபின் திரும்பிப் பார்த்தபோது, லோகேஷை நான்கு அதிகாரிகள் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதை கவனித்தேன். பின்னர் தான் அவர் விமான நிலையத்திற்கு தாமதமாக வந்ததால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதனால் தான் அவரால் வாக்களிக்க முடியவில்லை. இந்த தகவலை முதன்முறையாக நான் தான் பகிர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
—
