தனுஷ் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள ‘கர’ திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார் தற்போது படத்தின் புரமோஷனுக்காக பல பேட்டிகளை அளித்து வருகிறார். ஒரு பேட்டியில், ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிந்தது குறித்து கேட்கப்பட்டபோது, அவர் தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
அவர் கூறியதாவது: “என்னுடைய ‘ஜக்குபாய்’ திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்தது. அது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி மிகப்பெரிய வலியை அனுபவித்தோம். அந்த நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வேதனையை நான் நேரடியாக அனுபவித்தேன். படம் வெளியாகும் முன்பே கசிந்ததால், தயாரிப்பாளர்கள் அதை அப்படியே வெளியிட முடியாது என்று முடிவு செய்து, காட்சிகளின் வரிசையை மாற்றினர்.
அதனால் வயதான தோற்றத்தில் வரும் காட்சிகள் திரைக்கதைக்கு பொருந்தாத இடங்களில் வந்துவிட்டது. அதன் விளைவாக படம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக நாம் மிகவும் கடினமாக உழைத்திருந்தோம். ஆனால் அந்த உழைப்பு அனைத்தும் வீணாகி போனதற்கு காரணம் பைரஸிதான். அதனால் தான், பெரிய படங்களில் வேலை செய்யும்போது டப்பிங் காபிகளை கூட பிளாக் & வைட் வடிவில் அனுப்புவேன்.
எஃபெக்ட்ஸ் பணிகளுக்காக அனுப்பும் போது வசன ஒலியையும் சேர்க்க மாட்டேன். அவர்கள் சவுண்ட் டிராக் கேட்டாலும் அனுப்ப மாட்டேன். ஏனெனில் ஒரு முழுப் படத்தை பைரஸி காரணமாக இழந்த அனுபவம் எனக்கு உள்ளது. இப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் அதை கட்டுப்படுத்த முயற்சித்தேன். ஒரு படம் தயாராகி ரிலீஸ் தள்ளிப்போனால் இத்தகைய ஆபத்துகள் அதிகரிக்கும். தற்போது நடந்த விஷயத்தில் தயாரிப்பாளர் மீண்டு வர வேண்டும். மக்கள் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பது முக்கியம்” என்றார்.
—
