இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ‘பிரேக் பாஸ்ட்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணவ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ரோஸ்மின், கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் மற்றும் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கவிஞர் வைரமுத்து பேசுகையில், “பழைய கால நடிகர்களின் நடிப்புக்கும், இன்றைய கால நடிகர்களின் நடிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இப்போது நடிப்பு என்பது ‘இருத்தல்’ என்ற நிலைக்கு மாறிவிட்டது. நடிகர் கதாபாத்திரமாக இருப்பதே முக்கியம், அதிகமாக எதையும் செய்ய வேண்டாம் என்று கூறி நடிக்க வைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “திருமண வாழ்க்கையில் உருவாகும் பிரச்சினைகளைக் குறித்து பேசும் கதையாக இந்த படம் அமைந்துள்ளது. இந்தக் கதையை நான் விரும்பினாலும், படத்தின் தலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் படம் உலகம் முழுவதும் ஓடும் என்று யார் கூறினார்? அப்படி என்றால் அனைத்து ஆங்கிலப் படங்களும் உலகம் முழுவதும் வெற்றி பெற வேண்டாமா? நான் இதை குறையாகச் சொல்லவில்லை, தமிழன் என்ற முறையில் என் மனக்கசப்பை வெளிப்படுத்துகிறேன். தமிழில் உருவாகும் படங்களுக்கு தமிழிலேயே தலைப்பு வைக்கப்பட வேண்டும். அப்போது அந்த பெயர் கோடிக்கணக்கான மக்களால் உச்சரிக்கப்படும், எழுதப்படும், பகிரப்படும்” என்று தனது கருத்தை பகிர்ந்தார்.
