கடந்த சில மாதங்களாக கார் ரேசிங் தொடர்பான பணிகளுக்காக துபாயில் அதிக நேரம் செலவழித்த அஜித், தற்போது ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலை காரணமாக சென்னை திரும்பியுள்ளார். நேற்று மாமல்லபுரம் மேற்குராஜ வீதி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மல்லிகேஸ்வரர் கோவில் சென்றார். சோமவார பிரதோஷ நாளான நேற்று மாலை சுமார் 6:20 மணியளவில் சிலருடன் கோவிலுக்கு வந்த அஜித், அங்கு வழிபாடு செய்தார்.
கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருடன் வந்த நபர் ஒருவர், 11 முக ருத்ராட்ச மாலையை சுவாமிக்கு சமர்ப்பித்து பின்னர் அணிந்துகொண்டார். இத்தாலியில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டி அஜித் இந்த வழிபாட்டை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், நேற்று முன்தினம் தனது மகனின் கால்பந்து போட்டியையும் அவர் ரசித்துள்ளார். இவ்வாறு தனிப்பட்ட நேரத்தை கழித்து வருகிறார்.
அதே சமயம், அவரது அடுத்த படம் எப்போது அறிவிக்கப்படும், இந்த ஆண்டில் படம் வெளியாகுமா என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, அஜித்தின் கால்ஷீட் தற்போது கிடைப்பதாகவும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கதையுடன் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கான தொழில்நுட்பக் குழுவும் தயார் நிலையில் உள்ளதாம். ஆனால் தயாரிப்பாளர் இன்னும் உறுதி செய்யப்படாததால், முழு குழுவும் தற்போது காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
