ரம்பா, 90களின் தொடக்கத்தில் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானவர். தமிழில் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றார். அதன் பின்னர் அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். ஆந்திராவைச் சேர்ந்த ரம்பா, கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கு குடியேறியுள்ளார். தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர், மீண்டும் திரையுலகில் நடிக்கத் தயாராகி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “எனக்கு பச்சைக் குத்திக் கொள்வதில் ஒருபோதும் விருப்பம் இல்லை. ஊசியைக் கண்டாலே எனக்கு பயம் ஏற்படுகிறது. மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகும் அந்த பயம் மாறவில்லை. திருமணத்திற்குப் பிறகு, என் கணவரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் திருமணமான சில காலத்திலேயே தொடர்ந்து மூன்று குழந்தைகளுக்கு தாயானேன். இப்போது என் கணவர் மற்றும் என் குழந்தைகள் என நான்கு பேரின் பெயர்களையும் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதற்கான வலியை தாங்கும் தைரியம் எனக்கு இல்லை என்பதால் அதை செய்ய முடியவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
