ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ திரைப்படத்தின் கதை முதலில் நடிகர் விஜய்க்கு சொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதைப் பற்றி அவர் கூறுகையில், இந்தக் கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததுடன், உடனடியாக படத்தை தொடங்கவும் அவர் ஆர்வம் காட்டியதாக தெரிவித்தார். ஆனால் திரைக்கதையை முழுமையாக வடிவமைக்க கூடுதல் நேரம் தேவைப்பட்டதால், அப்போது அந்தத் திட்டம் முன்னேறவில்லை என்று கூறினார்.
இதற்கிடையில், நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்த பின்னர், ‘கருப்பு’ திரைப்படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, பின்னர் நடிகர் சூர்யாவிடம் கதை விவரிக்கப்பட்டதாகவும் ஆர்.ஜே. பாலாஜி குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
