பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியாகவும், தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார். தெலுங்கு சினிமாவில் அவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
துணை முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு சில மாதங்கள் திரைப்படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு ‘ஹரிஹர வீர மல்லு’ மற்றும் ‘ஓஜி’ போன்ற திரைப்படங்களில் மீண்டும் நடித்தார். அதில் ‘ஓஜி’ திரைப்படம் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தை இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ளார். 2012ஆம் ஆண்டு வெளியான ‘கப்பர் சிங்’ திரைப்படத்திற்கு பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கர் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா மற்றும் ராஷி கன்னா நடித்துள்ளனர். இதில் பவன் கல்யாண் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தணிக்கை வாரியம் இந்த திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
