தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய்குமார், அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘சிறை’. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்ற இந்த படம், வசூல் ரீதியாகவும் திருப்திகரமான பலனை பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் திரையரங்குகளில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்த படம் ஓ.டி.டி. தளங்களிலும் வெளியாகி அங்கும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் ‘சிறை’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: ‘சிறை’ திரைப்படத்தை தமிழ் மக்கள் பார்த்த விதம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. இந்த படம் வேறு மொழிகளில் வெளியானிருந்தால் இவ்வளவு பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றிருக்குமா என்பது தெரியவில்லை” என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் மட்டும்தான் இவ்வாறான புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்படும் சிறிய முயற்சிகளையும் கூட மக்கள் அங்கீகரித்து ஆதரிக்கிறார்கள்” என்றும் கூறினார். வெற்றிமாறன் கூறிய இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
