அறிமுக பெண் இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் அனைத்தையும் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’. இந்த படத்தை எல்.ஜி. மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நடிகர் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். இந்த படத்தில் தம்பி ராமையா மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மாஸ்டர் சஷான்த் முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இசையமைப்பாளர் எல்.வி. முத்து கணேஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பி.ஜி. முத்தையா மேற்கொண்டுள்ளார்.
படத்தின் கதை குறித்து இயக்குநர் எஸ். லதா கூறுகையில், “இந்த திரைப்படத்தின் கதை 18ஆம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. ஒரு ஜமீன்தாரிடம் இருக்கும் புதையலை கொள்ளையடிக்க ஒரு கொள்ளைக்கார கும்பல் முயற்சிக்கிறது. அந்த புதையலை பாதுகாப்பதற்காக ஜமீன்தார் தனது மனைவியையும் குழந்தையையும் காட்டில் உள்ள காளி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த நேரத்தில் அனைவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்து விடுகிறார்கள்” என்று கூறினார். பின்னர் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்தார்களா? ஜமீன்தாரின் புதையல் பாதுகாக்கப்பட்டதா? என்பதையே சாகசங்களும் மாயாஜால அம்சங்களும் நிறைந்த கதையாக இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தடா வனப்பகுதியில் சுமார் 30 நாட்கள் நடைபெற்றதாகவும் கூறினார். குதிரையை மட்டும் உண்மையாக பயன்படுத்தியுள்ளோம். மற்ற விலங்குகள் அனைத்தும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கிராபிக்ஸ் போல தெரியாத அளவிற்கு காட்சிகள் தரமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த படத்தில் டிராகன் காட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. இது படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும். இந்த படம் குழந்தைகளுக்கான படம் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ரசிக்கும் வகையில் அனைத்து அம்சங்களும் கொண்ட சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.
