தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய அந்தப் படத்திற்குப் பிறகு, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற உறுதியுடன் ராம் சரண் தனது புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் அவர் தற்போது நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ‘மிர்சாபூர்’ தொடரின் மூலம் புகழ்பெற்ற திவ்யேந்து, நடிகர் ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். பல மொழி நடிகர்கள் இணைந்திருப்பதால், இந்தப் படம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதிக செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ‘பெத்தி’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரை ரை ரா ரா’ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமான் குரலில் வெளியான இந்தப் பாடல் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
