‘தி கேரளா ஸ்டோரி- 2’ படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு!

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் வசிக்கும் சில இளம்பெண்கள் வேலை வாய்ப்பு என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்ற கருத்தை மையமாகக் கொண்டு அந்த படம் உருவாக்கப்பட்டது. இந்தக் கதைக்களம் பல்வேறு விவாதங்களையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது. அதனால் அந்த திரைப்படம் கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் திரையிடப்படவில்லை. அதே நேரத்தில் சில மாநிலங்கள் அந்த திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்து வெளியிட அனுமதி வழங்கின.

இந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய படத்தின் கதையில் இந்து பெண்கள் கட்டாயமான காதல் உறவுகளில் சிக்க வைக்கப்பட்டு பின்னர் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான டிரைலரில் இந்தக் கதையின் சுருக்கமான காட்சிகள் இடம்பெற்றதால் மீண்டும் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்ற நபர் இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை பரிசீலித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க தணிக்கை வாரியத்திற்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த திரைப்படம் மீண்டும் பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading