‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நித்யா மேனன், அதன் பின்னர் ‘இட்லி கடை’, ‘தலைவன் தலைவி’ போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்துவரும் அவர், தற்போது ‘கேயுரி புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை ஒரு காணொளியுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் நித்யா மேனன்.
அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “என்னைப் பொறுத்தவரை திரைப்படங்களை உருவாக்குவது என்பது பெரிய கதைகளைச் சொல்லுவதற்கும் மேலானது. அது உண்மையான மனிதர்களை ஆழமான ஒரு வட்டத்தில் சென்றடைவதற்கான முயற்சி. அது அறிவை விட ஆழமான ஒரு நிலை. சிந்தனையைத் தாண்டிய ஒரு பரிமாணம். பகுத்தறிவை மீறும் ஒரு அனுபவம். ஒரு மாற்றத்தை உருவாக்கும் சக்தி. நான் படைப்புச் செயல்முறையில் முழுமையாக மூழ்கியிருக்கும் போது, என்னை கவனித்து பார்க்கும் மற்றவர்களிடமும் அமைதியாக அலைகள் போல பரவும் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
முழுமையாக பெயரிட முடியாத வழிகளில், முதலில் வெளிப்படையாக தெரியாமல் இருந்தாலும், பின்னர் மறுக்க முடியாத அதிசயமாக மாறும் அனுபவங்களை உருவாக்குவதே எனது விருப்பம். நான் நடிக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இதுவே என் செயல்முறையும் குறிக்கோளுமாக இருந்தது. இனி திரைப்படங்களை தயாரிக்கும் நிலையிலும் அதுவே என் நோக்கமாக இருக்கும். இந்த ‘கேயுரி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று நித்யா மேனன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
