‘பத்ரி’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த நடிகை பூமிகா, தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் தோன்றியுள்ளார். சமீப காலமாக அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் அவர், ‘யுபோரியா’ என்ற திரைப்படத்தில் நடித்து தனது பணிகளை நிறைவு செய்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் படவிழாவில் பூமிகா கலந்து கொண்டு உரையாற்றியபோது, ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
“இந்த படத்தில் நடிக்கத் தொடங்கிய நாளிலிருந்து எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. நள்ளிரவு நேரங்களில் கூட தூக்கம் வராமல் மனஅழுத்தத்துடன் தவிக்கிறேன்” என்று கூறியபடியே, அவர் கண்களில் கண்ணீர் ததும்ப தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தியதையடுத்து, அவர் மெதுவாக அமைதியானார். இந்த சம்பவம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘யுபோரியா’ திரைப்படம், சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது நிகழும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூமிகா, சாரா அர்ஜூன், பிருத்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியதைத் தொடர்ந்து, அதனை கொண்டாடும் வகையில் படவிழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
