தெலுங்கு திரையுலகில் இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 14-வது திரைப்படமாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று இந்த படத்திற்கு ‘ரணபலி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக முதல் பார்வை போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த படம் பீரியட் டிராமா ஜானரில் உருவாகி வருகிறது. வெளியிடப்பட்ட அறிமுக வீடியோவைப் பார்க்கும் போது, 1876-ம் ஆண்டு காலகட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியில் ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய காலத்தில், தென்னிந்தியாவில் அவர்கள் இந்திய மக்களின் நிலங்களை கைப்பற்றிய விதம் உள்ளிட்ட பல வரலாற்றுச் சம்பவங்களை மையமாக கொண்டு கதை அமைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த திரைப்படம் ‘தி கர்ஸ்ட் லேண்ட்: சப்த பூமி’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ஹாலிவுட்டில் ‘தி மம்மி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமான நடிகர் அர்னால்ட் வோஸ்லு, இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ரணபலி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 11-ம் தேதி ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
