தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளார். தமிழில் நடிகர் சூர்யா நடித்த ‘24’ திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில், நாக சைதன்யா, ஸ்ரீகாந்த் முரளி, பார்வதி திருவோத்து, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த ‘தூத்தா’ வெப் தொடர் 2023-ஆம் ஆண்டு வெளியானது. திகில் மற்றும் மர்மம் கலந்த திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகளை குவித்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘தூத்தா’ தொடரின் இரண்டாவது சீசன் உருவாகி வருகிறது. இந்த புதிய சீசனிலும் நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் விக்ரம் குமார் மீண்டும் இயக்கும் இந்த தொடரில், பார்வதி திருவோத்து, பிரியா பவானி சங்கர் மற்றும் முதல் சீசனில் இடம்பெற்ற பல முக்கிய நடிகர்களும் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த தொடரை தயாரிப்பதன் மூலம் தயாரிப்பாளராக தனது முதல் அடியை எடுத்து வைப்பதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார். இதற்கான தொடக்க பூஜை இன்று நடைபெற்ற நிலையில், அதில் இயக்குநர் விக்ரம் குமார், நடிகை பார்வதி திருவோத்து, நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கிடையில், நாக சைதன்யா தற்போது ‘விருஷகர்மா’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பான் இந்தியா அளவில் உருவாகி வரும் இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
—
