நடிகை ஜோதிகா கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் குடியேறி, ஹிந்தி திரையுலகில் தேர்ந்தெடுத்து சில கதைகளில் நடித்துவருகிறார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2024 ஆம் ஆண்டு வெளியான ‘சைத்தான்’, ‘ஸ்ரீகாந்த்’ ஆகிய ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ‘டப்பா காட்ரல்’ என்ற திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். இந்த படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன.
இந்த நிலையில், தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகரான சன்னி தியோல் நடிக்கும் புதிய திரைப்படத்தில், ஜோதிகா அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஆண்டனி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, பர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்த்வானி இணைந்து நடத்தி வரும் எக்ஸெல் எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் இபாலாஜி கணேஷ் இயக்குகிறார். வருகிற பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘பார்டர் 2’ திரைப்படத்தின் மூலம் சன்னி தியோல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றியின் சூட்டோடு சூடாக இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
