கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று என் இல்லத்திற்கு வருகை தந்தார். ‘பாசமுள்ள மனிதனப்பா – நான் மீசவச்ச குழந்தையப்பா’ என்ற வரிகளுக்கு இன்றும் அவர் தான் முழுமையான இலக்கிய உருவாக விளங்குகிறார். உண்மையிலேயே வியப்புக்குரிய மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடித்துக்கொண்டு ஓடும் அரசியல் வெள்ளமும், சாய்த்துக்கொண்டு ஓடும் சமூக புயலும் கடந்தும், அரை நூற்றாண்டு காலமாக ஒருவர் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வது ஜாதகத்தால் அல்ல, சாமர்த்தியத்தால் தான் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உணவு முறை மற்றும் உடல் நிலை குறித்து தொடங்கிய எங்களின் உரையாடல், பல்வேறு விஷயங்களைத் தொட்டு விரிந்ததாகவும், சுமார் நூறு நிமிடங்கள் நீடித்த அந்த உரையாடலை ‘கிரீன் டீ’ கூடக் கெடுக்கவில்லை என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதித்தபோது, ஒவ்வொரு விஷயத்திலும் ரஜினிகாந்த் காட்டிய ஆழமும் தெளிவும் உண்மையும் தனது ஆர்வத்தை தூண்டியதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், வடநாட்டு அரசியல் குறித்தும், அங்கு விரைவில் ஏற்படக்கூடியதாக நம்பப்படும் ஒரு மாற்றம் குறித்தும் ரஜினிகாந்த் கூறியபோது, தான் நிமிர்ந்து உட்கார்ந்ததாக வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தனது கலைப்பயண திட்டங்களை ரஜினிகாந்த் விவரித்ததாகவும், 2027 ஆண்டு ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும் என்று குறிப்பிட்டுக் கொள்ளுமாறு அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். ரஜினிகாந்திடம் முதிர்ச்சி தெரிகிறது; முதுமை தெரியவில்லை என்றும், ‘இளமை இனிமேல் போகாது, முதுமை எனக்கு வாராது’ என்ற தனது தமிழ் பொய்யாகவில்லை என்றும் வைரமுத்து அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
