நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படம், முதலில் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து உச்சநீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், டிரைலர் வெளியான பிறகு அது ரீமேக் என்பதான கருத்து உறுதியாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பகவந்த் கேசரி படத்தை இயக்கிய அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் மன சங்கர வரபிரசாத் காரு நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் பேட்டியில் அனில் ரவிப்புடி பேசுகையில், “விஜய் சாரின் கடைசி படம் எப்போது வெளியானாலும் அது நிச்சயம் சாதனை படைக்கும். அந்த படத்தை நான் இயக்க வேண்டும் என்று என்னிடம் அவர் கேட்டிருந்தார். ஆனால், ரீமேக் வேண்டாம், நேரடியாக தமிழில் ஒரு புதிய கதையுடன் படம் இயக்க விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவரது கடைசி படம் என்பதால், அது ரீமேக் படமாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு பயம் எனக்குள் இருந்தது. இருந்தாலும், பகவந்த் கேசரி படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் உள்ள சில அம்சங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. ரீமேக் என்ற கேள்வி எழுந்தாலும், அந்தப் படத்தின் மீது அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
