விரைவில் வெளியாகவுள்ள ‘குட் டே’ திரைப்படத்தின் படக்குழு இப்படம் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவானதாக கூறுகின்றனர்.
அவரது வாழ்க்கையைப் பற்றிய விபரங்களை கேட்டபோது, அவர் ஒருகாலத்தில் குடிபழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மது அருந்திய பிறகு சட்டையை கழற்றி, ஹெல்மெட்டுடன் பஸ்ஸில் ஏறி “உலகத்தை மாற்றப்போகிறேன்” என்று ஆர்ப்பாட்டம் செய்த காலமுமிருந்தது. தற்போது அவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘குட் டே’ திரைப்படம் ஒரு குடிபழக்கத்தில் இருக்கும் நபரின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது திருப்பூரில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்வைச் சுற்றி நடக்கிறது. எனவே, கார்த்திக் நேத்தாவை அழைத்து அவரது வாழ்க்கை சம்பவங்களை கேட்டுப் பல காட்சிகளை உருவாக்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும், இப்படம் ஒரு நேர்மறையான செய்தியைக் கூறுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த படத்திற்கு பாடல் எழுதியுள்ள கார்த்திக் நேத்தா கூறுகையில், “இது என்னுடைய 100வது படம் என்பதால் மிகுந்த பெருமை கொள்கிறேன். சிம்பு நடித்த ‘தொட்டி ஜெயா’ படத்தில் முதல் முறையாக பாடல் எழுதத் தொடங்கினேன். ‘இந்த ஊரு எனக்குப் பிடிச்சு’ என் முதல் பாடல். இதுவரை 170க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி உள்ளேன்,” என தெரிவித்துள்ளார். ‘குட் டே’ படத்தை அரவிந்தன் இயக்கியிருக்க, ஹீரோவாக பிருத்விராஜ் ராமலிங்கம் நடித்துள்ளார். இவர் ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.