மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50-வது ஆண்டு பொன்விழா, இசை விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் சத்யராஜுக்கு ‘கலைஞர் விருது’ வழங்கி அவரை கவுரவித்தார்.

பின்னர், தனது உரையில் மு.க. ஸ்டாலின் கூறுகையில், மிகவும் தகுதி வாய்ந்த ஒருவருக்கே கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். திராவிடத்தை தமிழுக்கு அரண் என அழைத்தும், பெரியாராக திரையுலகில் வாழ்ந்து காட்டியவரும் சத்யராஜ்தான். நடிகராக தன்னை உருவாக்கியது கருணாநிதிதான் என்று கூறும் சத்யராஜுக்கு இந்த விருது வழங்குவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்தார்.

கலைஞர் விருதை பெற்ற சத்யராஜ் தனது பேச்சில், “இதற்கு முன்பு வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்துப் பல விருதுகளை கலைஞர் கருணாநிதியின் கைகளால் பெற்றேன். ஆனால் அவரின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகப்பெரும் பெருமையளிக்கிறது. இந்த விருதை எனக்கு வழங்கிய தளபதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி” என்று கூறினார்.