இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று ‘பாகுபலி’ ஆகும். ‘பாகுபலி: தி பிகினிங்’ மற்றும் ‘பாகுபலி: தி கன்க்ளூஷன்’ ஆகிய இரண்டு பாகங்களும் பாக்ஸ் ஆபீஸில் சாதனைகளை முறியடித்து, தெலுங்கு திரைப்படத்துறையை சர்வதேச அளவில் உயர்த்தின.

அத்துடன், இந்த இரண்டு படங்களும் நடிகர் பிரபாஸை இந்திய அளவில் ஒரு சூப்பர் ஸ்டாராக மாற்றின. தற்போது இந்த இரு படங்களும் “பாகுபலி: தி எபிக்” என்ற தலைப்பில் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. இப்படத்தின் இறுதியில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி மூன்றாம் பாகத்தை அறிவிப்பார் என்ற ஊகங்கள் பரவலாக உருவாகியிருந்தன.
ஆனால், ராஜமவுலி சமீபத்தில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போதைக்கு மூன்றாம் பாகம் குறித்த எந்தத் திட்டங்களும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதற்கு பதிலாக, “பாகுபலி: தி எடர்னல் வார்” என்ற அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.


 
