மலையாள திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் “ஆக்சன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வந்தார். இதையடுத்து ‘ஜெகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் 2, ‘கட்டா குஷ்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தற்போது சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தன்னிடம் பலர் ஒரு கேள்வியை எழுப்பியதாகக் கூறியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: “நிறைய பேர் என்னிடம் ‘சூரி சார் உடன் நடிக்க உங்களுக்கே சரியா?’ என்று கேட்டார்கள். ஏன் இந்தக் கேள்வி கேட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. சூரி சார் போன்ற ஒருவருடன் நடிக்க முடிந்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ஏனென்றால், அவர் ஒரு உயர்ந்த நிலை கொண்டவர். நீங்கள் எந்த ஸ்டாரை எடுத்துக் கொண்டாலும், அந்த அளவுக்கு அவர் இருக்கிறார். அவர் மிகவும் நேர்மையானவர். அவருடைய வார்த்தைகள் எல்லாம் அன்பும் மரியாதையும் நிறைந்தவை என அவர் கூறியுள்ளார்.