தமிழ் திரைப்பட உலகில் ‘சேதுபதி’ மற்றும் ‘சித்தா’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அருண்குமார், தனது புதிய படமான ‘வீர தீர சூரன்’ மூலம் நடிகர் விக்ரம் உடன் இணைந்துள்ளார். இது விக்ரத்தின் 62வது திரைப்படம் ஆகும். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை எச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
‘வீர தீர சூரன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதலில், இப்படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வர உள்ளது. அதன் வெளியீட்டிற்குப் பிறகு முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில், விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே, இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வைரலானது. மேலும், தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், படத்தை பார்த்து, தனது X (Twitter) தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். அதில், மிகவும் மகிழ்ச்சியான தருணம்! படத்தை தணிக்கைக்குப் பிறகு அனுப்பும்முன், இந்த அற்புதமான படத்தை கியூப் திரையரங்கில் எங்களுக்கு காட்டிய திறமையான இயக்குநர் சு.அருண்குமாருக்கு மனமார்ந்த நன்றி. விக்ரமிடமிருந்து, இது மிகவும் எதார்த்தமான, கல்ட்-கமர்ஷியல் திரைப்படமாக உள்ளது. இது விக்ரமின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். வரும் 27ம் தேதி முதல், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கவுள்ள பாராட்டுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.”