பிரமாண்ட இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு விழா நாளை மறுநாள் நவம்பர் 15ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.

தற்காலிகமாக ‘குளோப் ட்ராட்டர்’ என்ற பெயரில் இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐதராபாத்தின் புறநகர்பகுதியில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விழாவுக்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்காக 100 அடி உயரமும், 130 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
இத்தகைய அளவில் ஒரு திரைப்பட விழா இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் நடந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. விழாவை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவையும் ராஜமவுலி வெளியிட்டுள்ளார். காவல்துறையின் ஆலோசனையின் பேரில் 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் மற்றும் முதியோர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை முன்னிட்டு, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனைப் பற்றிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுமாறு ராஜமவுலி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

