தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக இயக்கத் திட்டமிட்டு இருந்த தனது கனவு திரைப்படத்தை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ‘கில்லர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் இப்படம் பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் முன்னதாக தமிழில் அயோத்தி, எலெக்ஷன், மறந்தேன் மன்னித்தேன் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள கவினின் ‘கிஸ்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்வில் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமீப காலமாக, எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருவதால், அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, வில்லனாக அவர் நடித்துள்ள பல கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது அவர் பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, கார்த்தியுடன் ‘சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
முன்பு வாலி, குஷி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் கடைசியாக 2015ம் ஆண்டு ‘இசை’ என்ற படத்தை இயக்கியும், அதில் நடித்தும் இருந்தார். தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக மாறுவது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.