பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படமான “மதராஸி” உருவாகியுள்ளது. இதில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியுள்ளார். “மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பங்கேற்றார். அப்போது, நடிகர் சிவகார்த்திகேயனைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “மான் கராத்தே திரைப்படத்தின் போது, தொலைக்காட்சியில் இருந்து வந்த நடிகராக சிவகார்த்திகேயனை பார்த்தேன். அப்போது அவர் சுமார் ஆறு படங்களில் நடித்திருந்தார். எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு வருபவர்களுக்கு அவர் ஒரு நம்பிக்கையாக மாறியுள்ளார். திறமை மற்றும் கடின உழைப்பு இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கான உதாரணமாக அவர் இருக்கிறார். ‘மதராஸி’ திரைப்படத்திற்காக அவரை நேரில் சந்தித்துப் பேசும்போது, அவருடைய வளர்ச்சி மிகவும் நேர்மையானதாகவும், பாசிட்டிவாகவும் இருந்தது. சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சி எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.