பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர். தற்போது 85 வயதாகும் இவர், தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 80,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இதுவரை 8 தேசிய விருதுகள் பெற்றுள்ளதுடன், பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் போன்ற மத்திய அரசின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று கூறியுள்ளார். இதற்கிடையில், யேசுதாஸ் தற்போது அமெரிக்காவில் நலமாக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.