கன்னட திரை உலகின் பிரபல நடிகையான ருக்மணி வசந்த் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அவர் நடித்த ‘ஏஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘மதராஸி’ படம் வரும் 5 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில், படத்தின் தயாரிப்பாளர் என்.வி. பிரசாத், “ருக்மணி வசந்த் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்” என்ற ரகசியத்தை வெளிப்படையாகவே அறிவித்தார்.
பிரமாண்டமான ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகவுள்ள அந்தப் படத்தில் நாயகிக்குச் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், ருக்மணி வசந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், கன்னடத்தில் யஷ் ஜோடியாக ‘டாக்ஸிக்’, ரிஷப் ஷெட்டி ஜோடியாக ‘காந்தாரா: சாப்டர் 1’ போன்ற படங்களிலும் தற்போது ருக்மணி வசந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.