உத்தரப்பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகியுள்ளது. அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பயோபிக் திரைப்படம் ‘அஜய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி’ என்ற தலைப்பில் தயாராகியுள்ளது. இப்படத்தில், யோகி ஆதித்யநாத் ஆன்மீக குருவாக இருந்தவர் எவ்வாறு ஒரு மாநிலத்தின் முதல்வராக உயர்ந்தார் என்பதை தெளிவாகக் காண்பித்துள்ளனர். இந்த படத்தின் கதை, சாந்தனு குப்தா எழுதிய ‘தி மாங்க் ஹூ பிகேம் சீப் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சாம்ராட் சினிமாட்டிக்ஸ், “அவர் எல்லாவற்றையும் துறந்தார், ஆனால் மக்கள் அவரை தங்களுடையவராக ஏற்றுக்கொண்டனர்” என்று கூறி, படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த மோஷன் போஸ்டரில், யோகி ஆதித்யநாத் கதாபாத்திரத்தில் நடிகர் அனந்த் ஜோஷி நடித்துள்ளதை காணலாம். பின்னணியில், அனந்தும், பரேஷ் ராவலும் பேசிய குரல் ஒலிக்கிறது. அந்த வீடியோவில், பரேஷ் ராவல் “என்னிடம் என்ன வேண்டும்?” என்று கேட்கிறார். அதற்கு அனந்த், “வாழ்க்கையின் நோக்கம்” என்று பதிலளிக்கிறார். பரேஷ், “பாதை கடினமானது” என்கிறார். அதற்குப் பதிலாக, “நானும் பிடிவாதக்காரன்” என்கிறார் அனந்த். தொடர்ந்து, பரேஷ், “எல்லாவற்றையும் துறக்க வேண்டும்” என்கிறார். அதற்கு அனந்த், “நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்… ஒரே நோக்கம் மக்களின் சேவை” என்கிறார். அதையடுத்து, “அவர் எதையும் விரும்பவில்லை, ஆனால் எல்லோரும் அவரை விரும்பினார்கள். அவர் ஒரு சீடனாக வந்தார், ஆனால் மக்கள் அவரை முதல்வராக்கினார்கள்” என பரேஷ் ராவலின் குரல் ஒலிக்கிறது.
‘அஜய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி’ திரைப்படத்தில், அனந்த் ஜோஷியுடன் இணைந்து பரேஷ் ராவல், தினேஷ் லால் யாதவ் நிராஹுவா, அஜய் மெங்கி, பவன் மல்ஹோத்ரா, ராஜேஷ் கட்டர், கரிமா விக்ராந்த் சிங் மற்றும் சர்வார் அஹுஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மர்தானி 2’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ரவீந்திர கௌதம், இந்த யோகி ஆதித்யநாத்தின் பயோபிக் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘அஜய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி’ என்று பெயரிடப்பட்டுள்ளதற்குக் காரணம், அவர் பிறந்தபோது அவரது பெற்றோர் அவருக்கு ‘அஜய் சிங் பிஷ்ட்’ என்று பெயரிட்டிருந்தனர் என்பதே. இப்படத்தை ரிது மெங்கி தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.