இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘சூர்யவம்சம்’.சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தில், சரத்குமார் இரட்டை வேடங்களில் அப்பாவாகவும் மகனாகவும் நடித்திருந்தார். அப்பா-மகன் உறவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் தேவயானி, ராதிகா, பிரியாராமன், நிழல்கள் ரவி, மணிவண்ணன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், ஆனந்த்ராஜ் வில்லனாக மிரட்டும் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி தற்போது 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில், இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவரான ராஜகுமாரன் ‘சூர்யவம்சம் 2’ பற்றி அவரது எண்ணங்களை பகிர்ந்துள்ளார். அதில், “சூர்யவம்சம் என்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு வெற்றிப்படம். அதன் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானிக்கு ‘சக்திவேல்’ என்ற மகன் கதாபாத்திரம் உண்டு. அந்த கதாபாத்திரத்தில் இப்போது சிவகார்த்திகேயன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எனக்கு strongly தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.